திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.45 திருவாரூர் பண் - கௌசிகம் |
அந்த மாயுல காதியு மாயினான்
வெந்ந வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
|
1 |
கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த
ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு ஆரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.
|
2 |
மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்
இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
|
3 |
பல்லில் ஓடகை யேந்திப் பலிதிரிந்
தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.
|
4 |
குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.
|
5 |
வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே.
|
6 |
வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.
|
7 |
இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.
|
8 |
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ.
|
9 |
மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள்
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம்
ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
|
10 |
வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்
சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.109 திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும், திருமயேந்திரமும் - திருஆரூரும் - கூடச்சதுக்கம் பண் - பழம்பஞ்சுரம் |
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
1 |
வந்துமா லயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறணி மயேந்திரருங்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தன்ஆ ரூராதி யானைக்காவே.
|
2 |
மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.
|
3 |
கருடனை யேறரி அயனோர்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
|
4 |
மதுசூதனன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரருங்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன்ஆ ரூராதி யானைக்காவே.
|
5 |
சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருங்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் யானைக்காவே.
|
6 |
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
|
7 |
கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை யரக்கனைத தலைநெரித்தார்
விடமது வுண்டவெம் மயேந்திரரும்
அடல்விடை யாரூராதி யானைக்காவே.
|
8 |
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரருங்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூரெந்தை யானைக்காவே.
|
9 |
அறிவில் அமண்புத்தர் அறிவுகொள்ளேல்
வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.
|
10 |
ஏனமா லயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூராதி யானைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ்சொல்லுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |